தொலைநோக்குப் பார்வையோடும், சமதர்ம சிந்தனையோடும் சமூகத்தை உற்று நோக்கியவர் மகாகவி பாரதி. இனம், மொழி, நாடு, சாதி என்று அனைத்தையும் கடந்து சிந்தித்த அற்புத பிறவி! அடித்தட்டு மக்கள் சந்திக்கும் அவலங்களை எளிய கவிதை வரிகளாலே உணர்த்திய மாமனிதர்! அவருடைய புரட்சிகர சிந்தனைகளில் பெண்கல்வி, விதவை மறுமணம், பெண் விடுதலை, மதநல்லிணக்கம். கலப்புத் திருமணம் என எல்லாமே சமுதாய சீர்திருத்த நோக்குடன் அமைந்தவை. கொள்கைகள் யாருடையதானாலும், அதிலுள்ள குறைகளையும் நிறைகளையும் சமூக நலன் சார்ந்த கண்ணோட்டத்தோடு ஆராய்ந்து, தன் கருத்தை ஆணித்தரமாக வெளிப்படுத்துவதில் பாரதிக்கு இணை பாரதிதான்! . சமூக மறுமலர்ச்சியையும், தேசத்தின் விடுதலையையும் தனது உயிர்மூச்சாகப் பாவித்த பாரதியின் கவிதைகள், உரைநடைகள், கடிதங்கள் ஆகியவற்றை மேற்கோள் காட்டி, புரட்சிகரமான நடையில் இந்த நூலை எழுதியிருக்கிறார் தமிழருவி மணியன். மானுடத்துக்கும் மனிதநேயத்துக்கும் சான்றாக அமைந்திருக்கும் கவிஞரின் எண்ணங்களையும், அவர் ஏற்படுத்திய எழுச்சி மிகு மாற்றங்களையும் இந்த நூலில் தெளிவாக விளக்குகிறார். தேசத்தின் ஒற்றுமைக்கும், சமுதாய மேம்பாட்டுக்கும் உகந்த ஆழ்ந்த சிந்தனைகளைக் கொட்டிக் குவித்த ‘பாரதியின் கனவு மெய்ப்பட வேண்டும்’ என்பதை தன் எழுத்தின் வன்மையோடு விளக்கியிருக்கிறார் நூலாசிரியர். தேசியம், தெய்விகம், மதம் என பல விஷயங்களிலும் பாரதியின் பார்வை எத்தகையது என்பதைப் படித்தறிய _ பகுத்தறிய உதவும் நூல் இது.
கனவு மெய்ப்பட வேண்டும்
No Comments Monday 24 Apr 2017 | ஆனந்த விகடன் (Ananda Vikatan), புத்தக விமர்சனம் |
ஏனைய செய்திகள்