ஹலோ சுட்டீஸ்! எப்படி இருக்கீங்க? எப்பவும் எதையாவது தெரிஞ்சுக்கணும்ங்கிற ஆர்வம் இருக்கறவங்கதானே நீங்க! 'அது என்ன? இது ஏன் இப்படி இருக்கு? சூரியனைத் தாண்டி வேற உலகம் இருக்கா? இந்த மெஷின் எப்படி வேலை செய்யுது?' _ இப்படி ஏராளமான கேள்விகள் கேட்டுக்கிட்டே இருப்பீங்க.
பள்ளிக்கூடத்துல சில புத்தகங்களைக் குடுத்து 'இதைத்தான் படிக்கணும்... இதைப் படிச்சே தீரணும்'னு சொல்லும்போது நீங்க பரீட்சைக்காக மட்டுமே அதைப் படிப்பீங்க. அதே நேரத்துல, இன்னும் அதிகமான விஷயங்களைத் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுவீங்க.
உங்களோட அந்த ஆர்வத்தைச் சரியான விதத்துல ஊக்கப்படுத்தறதுக்குன்னே உருவாக்கப்பட்டதுதான் இந்த 'மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்'.
'நமக்கு தெரியும்னு நினைச்ச விஷயங்கள்ல தெரியாதது இவ்வளவு இருக்கா?'னு உங்களை நிச்சயம் இந்தப் புத்தகம் ஆச்சரியப்படவைக்கும்.
உள்ளே போங்க... கடலுக்குள்ள இருக்கிற அதிசயங்கள், உயிரியல் உலகத்துல வித்தியாசமான விலங்குகள் இப்படி எல்லாத்தையும் நேர்ல பார்த்த மாதிரி பிரமிப்பு அடைவீங்க! 'மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்' உங்க சுட்டி விகடன்ல தொடராக வந்தப்போ உங்களை மாதிரி சுட்டிகள் அதைப் படிச்சு, பாராட்டி லெட்டர் போட்டு அவங்க காட்டின ஆர்வத்தை என்னால மறக்கவே முடியாது.
'மாயா டீச்சர்கிட்டே உங்க சந்தேகங்களைக் கேக்கலாம்'னு அறிவிப்பு செஞ்சதுமே வந்து குவிஞ்ச லெட்டர்ஸே அதுக்கு சாட்சி. 'அடேங்கப்பா'னு ஆச்சரியப்பட வைக்கிற அளவுக்கு வெளியானது அந்த கேள்வி _ பதில் பகுதி. இந்தப் புத்தகத்தில அந்தக் கேள்வி பதில்களையும் சேர்த்திருக்கோம்.
இந்தப் புத்தகத்துல வந்திருக்கிற விஷயங்கள் எல்லாமே உண்மையான தகவல்கள்தான். ஆனா, 'மந்திரக் கம்பளம்'ங்கறது மட்டும் உங்களைப் பரவசப் படுத்துவதற்கான கற்பனைக் கம்பளம்!
மாயா டீச்சராகவே மாறி உங்களுக்கு எளிமையா புரியற மாதிரி எழுதின ரமேஷ் வைத்யா, வள்ளி ரெண்டு பேருக்கும் உங்க எல்லார் சார்பாகவும் என்னோட பாராட்டுக்கள். ஒரு கற்பனை உலகத்துக்கே உங்களைக் கூட்டிட்டுப் போன ஓவியர்கள் ஸ்யாம், ஹரன் ரெண்டு பேரையும் பாராட்டணும்.
நீங்க சந்தோஷமா இந்தப் புத்தகத்தைப் படிச்சு புதுப்புது விஷயங்களை தெரிஞ்சு பயனடைவீங்கனு நம்பறேன்.