பி. ஸ்ரீநிவாச்சாரி அல்லது பி.ஸ்ரீ.
(ஏப்ரல் 16, 1886 – அக்டோபர் 28, 1981) பேச்சாளராக, எழுத்தாளராக,
உரையாசிரியராக, பதிப்பாசிரியராக, வரலாற்று ஆசிரியராக, பத்திரிகை ஆசிரியராக,
சமயாச்சாரியராக, திறனாய்வாளராக, காந்தியவாதியாக, கம்ப மேதையாக இப்படி
பன்முக வித்தகராக விளங்கியவர். இவர் பி. ஸ்ரீ. ஆச்சார்யா என்றும்
வழங்கப்படுகிறார்.
இவர்
எழுதிய "ஸ்ரீஇராமானுஜர்" என்னும் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு 1965-ஆம்
ஆண்டு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. மதுரையில் நடைபெற்ற ஐந்தாவது
உலகத் தமிழ் மாநாட்டில் பாராட்டும், பொன் முடிப்பும் வழங்கப்பட்டது.
நெல்லை
மாவட்டத்தில் உள்ள விட்டலாபுரம் என்ற ஊரில் 1892-ஆம் ஆண்டு பிறந்தார்.
தமிழ் இலக்கியத்தில் நல்ல ஆற்றலும், உலக இலக்கியங்கள் பற்றித் தீவிரமான
அறிவும் ஈடுபாடும் உள்ளவர். அவருடைய கம்ப சித்திரம் ஆனந்த விகடனில் தொடர்
கட்டுரைகளாக வெளிவந்து, பலர் கவனத்தையும் கவர்ந்தது. இன்றும் பலரும் கம்ப
ராமாயணம் பற்றிப் பேசுவதற்கு அடி எடுத்துத் தந்தவர் பி.ஸ்ரீ என்றுதான்
சொல்ல வேண்டும்.
மும்மொழி
வித்தகரான இவரது நூல்கள் எல்லாம் சிறந்தவை என்றே கூற வேண்டும். இதிலும்
குறிப்பாக கம்ப சித்திரம், சித்திர ராமாயணம், திவ்யப் பிரபந்த சாரம்,
திருப்பாவை, திருவெம்பாவை, மஹாபாரதக் கதைகள் இவைகளைச் சொல்லலாம்.
தமிழ்ச்
சுவையை தாம் அனுபவிக்குமாறே பிறரையும் அனுபவிக்கச் செய்யும் விசேஷத்திறமை
வாய்ந்தவர். பல சந்தேக விபரீதங்களை அழித்தருளியவர். உயர்ந்த மதி நலமும்,
ஆழ்ந்த அனுபவமும் உடையவர். சைவ வைஷ்ணவங்களாகிய இரு சமயங்களிலிருந்தும் அரிய
பெரிய விஷயங்களை யாவரும் எளிதில் அறியும்படி நூற்றுக்கும் மேற்பட்ட
நூல்களை எழுதியுள்ளார்.
பி.ஸ்ரீ.யின்
தமிழ்ப்பணி பெரும்பாலும் தேசிய நூல்கள், சமய இலக்கியங்கள், வாழ்க்கைச்
சரிதங்கள், வேதாந்தங்கள், வரலாறுகள் எனப் பல்வேறு துறைகளில் பரந்து
விரிந்து சென்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்து இருபத்தி ஒன்றாம்
நூற்றாண்டு தமிழிலக்கியத் திறனாய்வுத் துறைக்கும் ஒப்புமை நோக்கிற்கும்,
வழிவகுத்து தந்து, பி.ஸ்ரீ. தொண்ணூற்று நான்கு ஆண்டுகள் வாழ்ந்தார். மூன்று
தலைமுரையினரைப் பார்த்துப் பேசிப் பழகியவர். தமது இலக்கிய உரைநடை
மறுமலர்ச்சியில் சிறப்பாகத் திறனாய்வுத்துறையில் ஒரு புதிய சகாப்தத்தை
நிறுவ உதவி செய்தார். நூற்றுக்கு மேற்பட்ட நூல்களையும் பல நூறு
கட்டுரைகளையும் எழுதித் தமிழுக்கு அருந்தொண்டாற்றினார்.