-
இளவழுதியின் இதழ்களில் இளநகை அரும்பியது. “மதி அங்கு எப்படி
இருக்கும். அதுதான் உன் முகத்தில் இணைந்து விட்டதே?” என்றான் இளவழுதி.
இதைச் சொன்ன அடுத்த கணம் அவன் இதழிலிருந்த முறுவல் மறைந்தது. உதடுகள்
மீண்டும் திறந்து சொற்களை உதிர்த்தன. “அரசி! வானத்தில் மதியில்லாமல்
இருந்தால் என்ன? வானம் பெரிய கறுப்புக் கம்பளி. அதில் நக்ஷத்திர வைரங்கள்
இறைத்து விடப்பட்டிருக்கின்றன. அதோ இரண்டு நக்ஷத்திரங்கள் ஒன்றை நோக்கி
ஒன்று நகர்ந்து வருகின்றன. அவற்றுக்குத் தலைகள் மட்டும் இருக்கின்றன. உன்
தலை ஒன்று. என் தலை ஒன்று. இரண்டும் இணைந்து விட்டன” என்று தொடர்ந்து
பேசினான். அவன் தலைமாட்டில் நின்ற அந்த அழகியின் கண்களில் திடீரென ஒளியொன்று தெரிந்தது. பேரன்
பேச்சையும் அவன் நிலையையும் பார்த்துக் கொண்டே நின்ற கிழவன், அரையன்
மந்திரத்தால் கட்டுண்டு கிடப்பவன் போல் அசையாமல் கிடப்பதைக் கண்டான். அவன்
ஏதோ போதையில் இருப்பது போலவும் தெரிந்தது. அந்தச் சமயத்தில் திடீரென தனது
கையை நீட்டிய அந்த அரபுச் சிலை அராபியன் கொடுத்த கிண்ணத்திலிருந்த மருந்து
போன்ற மதுவை மீண்டும் இளவழுதிக்குப் புகட்ட முயன்றாள். தன் கன்னத்தை அவன்
கன்னத்தோடு இழைத்த வண்ணம் உதடுகளில் தங்கக் கிண்ணத்தைப் பொருத்தினாள். அந்த
விபரீதம் அப்பொழுதும் நடந்தது. கிறீச்சென்று இளவழுதி மீண்டும் அலறினான்.
அரபுச்சிலை மிகுந்த கோபத்துடன் எழுந்தாள் கையில் பொற்கிண்ணத்துடன். ஆனால்
இம்முறை விளைந்த விபரீதம் வேறு. கிழவன் தனது நீண்ட கையால் அவள் கையிலிருந்த
கிண்ணத்தைத் தட்டிவிட்டான். அடுத்து அராபியன் மீது பாய்ந்து அவன் கையைத்
திருகி அவன் கையிலிருந்த மெல்லிய கத்தியையும் மரக்கலத்தட்டில் விழும்படி
செய்தான். அடுத்து தனது குறுவாளை எடுத்துக் கொண்டு “அரசி! என் பேரனை
மரியாதையாக விட்டுவிடு. உன் மரக்கலத்தை யாரும் தடை செய்யாதவாறு பார்த்துக்
கொள்கிறேன். வேண்டுமானால் உன் மரக்கலத்தைச் செலுத்த துடுப்புத் துழாவும்
பரதவர்களில் சிலரையும் அனுப்புகிறேன். நீயும் இந்த அராபியனும்
தன்னந்தனியாகப் போக வேண்டாம்” என்றான். பதிலுக்கு நகைத்தாள் அரசி.
முதியவன் முற்றும் எதிர்பாராத நிகழ்ச்சி ஏற்பட்டதால் திகைத்தான் பெருவழுதி,
மரக்கலம் வெகுவிரைவாக முன்னேற ஆரம்பித்தது. பக்கங்களில் சுமார் நூறு
துடுப்புகள் துழாவும் சத்தம் கேட்டது. பெரும் பிரமை பிடித்த பெருவழுதி
வெளியே ஓடிப் பக்கப் பலகையில் தலை நீட்டி சமுத்திர நீர்மட்டத்தைக்
கவனித்தான். துடுப்புகள் பல வேகமாகத் துழாவின, கடல் நீரை. ஆனால் துழாவும்
மாலுமிகள் யாருமே இல்லை. திரும்ப திகிலுடன் பெருவழுதி அறையை நோக்கி
ஓடினான். அறையில் யாருமே இல்லை.மரக்கலம் மட்டும் துடுப்புகள் துழாவ பாய்
புடைத்திருக்க வேகமாக ஓடிக் கொண்டிருந்தது.
-
இந்த நூல் அலை அரசி, சாண்டில்யன் அவர்களால் எழுதி பாரதி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , அலை அரசி, சாண்டில்யன், Sandilyan, Novel, நாவல் , Sandilyan Novel,சாண்டில்யன் நாவல்,பாரதி பதிப்பகம், Bharathi Pathippagam, buy Sandilyan books, buy Bharathi Pathippagam books online, buy tamil book.
|