இந்த நூல் மாணிக்கவாசகர், திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் எழுதி குகஸ்ரீ வாரியார் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.ஞானமே வடிவாகிய வயலூர் வள்ளற் பெருமானுடைய
தனிப்பெருங் கருணையினாலே அறிவால் சிவமேயாகிய மாணிக்கவாசக சுவாமிகளைப்
பற்றிப் பேசுவதற்கு மேற்கொள்கிறேன்.ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை,
ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என்ற நான்கு படிகளிலே ஞானத்தில் ஞானம்
என்ற படியிலே நின்று இந்த உலகத்தை உய்வித்தவர் மாணிக்கவாசக
சுவாமிகள். அழுது அடியை அடைந்த அடிகளார். அவர்கள் திருவாசமாகிய தேனை நமக்கு
உபகரித்தார்கள்.
தேன் எத்தனை ஆண்டுகளானாலும் கெட்டுப்
போகாது. தேன் தானுங் கெடாது; தன்னிலே விழுந்த பொருளையும் கெட விடாது.
அப்படி திருவாசகம் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகளாகச் சிதையாமல் அழியாமல் நின்று
உய்விக்கின்றது.
தேவாரத்தில் அநேக பகுதிகளைச் செல் தின்று
விட்டது. திருவாசகத்திலே ஒரு வரி கூட அழியவில்லை. மாணிக்கவாசகர் சொல்ல
ஆண்டவனே எழுதியது திருவாசகம். மூவருக்கும் தேவருக்கும் எட்டாத எம்பெருமான்
தம்முடைய கரத்தினால் எழுதினாரென்றால் அதனுடைய பெருமையை யாரால் அளக்க
முடியும்? மந்திரம் என்ற வார்த்தைக்கு 'நினைத்தவர்களைக் காப்பாற்றுவது'
என்று பொருள்.
பதினொரு மந்திரங்களிலே எட்டாவது மந்திரம்
சிகா மந்திரம் - ஓம் சிகாயை நம என்று வரும். பன்னிரண்டு திருமுறைகளிலே
எட்டாவது திருமுறை திருவாசகம். எட்டாவது மந்திரம் சிகா மந்திரம். சிகைக்கு
மேலே ஓர் உறுப்பு கிடையாது. திருவாசகத்துக்கு மேலே ஒரு தோத்திர நூல்
கிடையாது. அது எலும்பை உருகச் செய்யும் நூல். அன்போடு படிக்கின்றவர்களின்
உள்ளத்தை உருக்கும். ஆகவே, சிவமாந் தன்மையிலே நின்று பாடினார்
மாணிக்கவாசகர். சுவாமிகள் காலத்தாலும் முற்பட்டவர்; மூன்றாம் நூற்றாண்டில்
அவதரித்தவர்.
எழுத்தாளர் பற்றி :
திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகத்து 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த
முருக பக்தர். நாள்தோறும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே
தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன்,
எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர்.
"அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும்
பாராட்டப்பட்டவர். தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும்
பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை
இன்னிசையுடன் பாடினார். அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில்
இருக்கும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச்
செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும்.
வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும்
புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும்
கட்டுரைகள் எழுதியுள்ளார். குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்'
என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும்
வாரியார் எழுதியுள்ளார்.