உலகத்தில் உள்ள அனைத்தையும், நாம்
ஒவ்வொருவரும் பார்க்கின்றோம். ஒருவருக்கு மகிழ்ச்சியாக இருப்பது
மற்றொருவருக்கு மகிழ்ச்சியாக இருப்பதில்லை. இப்படி, ஒவ்வொன்றும் ஒவ்வொரு
விதமாக இருக்கிறது. இது ஏன்? இதற்கு விளக்கம் காண வேண்டும் என்றால்,
நாமெல்லோரும் பாரசீக ஞானியான ஷேக் ஸாதியிடம் தான் போக வேண்டும்.
பாரசீக ஞானி ஷேக் ஸாதி என்பவர் லைலா - மஜ்னு கதையைச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார்.
கயஸ் என்பவன் லைலா என்பவளை அளவுக்கு
அதிகமாகக் காதலித்து வந்தான். அந்தக் காதல் அவனை மஜ்னுவாக (பைத்தியமாக)
ஆக்கி விட்டது. ஊரே கயஸிடம் அனுதாபப்பட்டது. "ஹூம்... எவ்வளவு நல்ல பையன்.
இப்படி ஆகி விட்டதே" என்று பேசினார்கள். கடைசியில், "இவனை, இப்படிப்
பைத்தியமாக ஆக்கிய அந்த பெண்ணைப் பார்க்க வேண்டும். அவ்வளவு பெரிய அழகியா
அவள்?" - என்று தீர்மானித்த ஊரார், லைலாவை வரவழைத்துப் பார்த்தார்கள்.
அவ்வளவுதான். அனைவரும் லைலாவைக் கண்டதும்
அதிர்ந்தார்கள்; ஆச்சரியம் அவர்களைச் சூழ்ந்து கொண்டது. "சே! போயும் போயும்
இவளையா, கயஸ் காதலித்தான்? உணமையிலே அவன் மஜ்னு (பைத்தியம்) தான்" என்று
பேசினார்கள். காரணம், லைலா அழகற்றவள். அதுதான் ஏளனமாக அவர்களை அவ்வாறு பேச
வைத்தது.
எல்லோரும் ஏளனமாகப் பேசும் அவ்வேளையில்
அங்கிருந்த அறிவாளி ஒருவர், "நிறுத்துங்கள்! உண்மையிலேயே உங்களுக்கு
லைலாவைப் பார்க்க வேண்டும் என்றால், கயஸின் கண்களைக் கொண்டு பார்க்க
வேண்டும். அப்போதுதான் லைலாவின் அழகு உங்களுக்குத் தெரியும். உங்கள்
கண்ணில் பார்த்தால், உங்களுக்கு லைலாவின் அழகு தெரியாது" என்றார். அவ்வளவு
பேர்களும் வாயடைத்து நின்றார்கள்.
நம் அனைவருக்கும் தெரிந்த கதைதான் இது.
ஆனால் நமக்குத் தெரியாத ஒரு விஷயத்தை, எவ்வளவு அழகாகப் பாரசீக ஞானி
வெளியிட்டிருக்கிறார் - என்பதை உணரும்போது நமக்கு ஓர் உண்மை புரிகிறது.
அதாவது லைலாவைப் பார்க்க வேண்டுமென்றால், அதற்குக் கயஸின் பார்வையை நாம்
அடைந்தாக வேண்டும்.
ஒரு லைலாவைப் பற்றிய உண்மையை உணர்வதற்கே,
நம் பார்வை உதவாது என்கின்றபோது, நம் நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான
நல்லொழுக்க நூல்களைப் பார்ப்பதற்கு நம் பார்வை உதவுமா?