-
தமிழகத்தைப் பொருத்தவரை எம்.ஜி.ஆர். என்பது வெறும் நடிகரின் பெயரோ, வெறும் அரசியல்வாதியின் பெயரோ ஏன், வெறும் பெயரோகூட இல்லை. அது ஒரு குறியீடு.
இந்த மனிதர் எதைச் சாதித்து இப்படியொரு உயரத்தைத் தொட்டார் என்று எல்லோருக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவசியம் தோன்றும். பள்ளிகளில் சத்துணவு கொடுத்ததாலா? காமராஜ் செய்ததுதானே? பொக்கைவாய்க் கிழவிகளைக் கட்டிப்பிடித்து அன்பைத் தெரிவித்ததாலா? அதுவும் அரசியலில் புதிதில்லையே?
எம்.ஜி.ஆர். என்ன செய்ததால் தமிழக மக்களின் நெஞ்சில் இன்றுவரை நீடித்து வாழ்கிறார் என்று கண்டுபிடிப்பது ஓர் ஆர்வம் தூண்டும் சவால். இந்நூல் அச்சவாலைத் திறமையாக எதிர்கொள்கிறது. சினிமாவில் இருந்தவரை, அவரை முந்த இன்னொருவர் அங்கே கிடையாது. முதல்வரான பிறகு உயிருடன் இருந்தவரை அவரை எந்தத் தேர்தலிலும் தோற்கடிக்க யாராலும் முடியவில்லை. நேருவின் மகளானாலும் சரி, வேலுப்பிள்ளை மகனாக இருந்தாலும் சரி. அவரது பக்கபலம் இருந்தால் அனைத்திலும் வெற்றி என்று தீர்மானமாக நம்பினார்கள். அப்படித்தான் சொல்கிறது சரித்திரம்.
பொதுவாழ்வில் அவரது பிரம்மாண்ட வெற்றி ஓரிரவில் வந்ததல்ல. கடும் உழைப்பும் சலியாத உத்வேகமும் எளிதில் கண்டுபிடிக்கமுடியாத சூட்சுமக் கணக்குகளும் நிறைந்த அவரது வாழ்க்கை, சந்தேகமில்லாமல் ஒரு பெரிய பாடம். வெற்றுத் தரையில் இருந்து புறப்பட்டு விண்ணளவு சாதித்த ஒரு தன்னம்பிக்கைவாதியின் விறுவிறுப்பான, முழுமையான வாழ்க்கை வரலாறு இது.
பெரியார், அம்பேத்கர், இந்திரா வரிசையில் ஆர். முத்துக்குமாரின் அடுத்த முக்கிய நூல் இது.
-
This book Vaadhyar:MGR Vazhkkai is written by R. Muthukumar and published by Kizhakku Pathippagam.
இந்த நூல் வாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை, ஆர். முத்துக்குமார் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaadhyar:MGR Vazhkkai, வாத்யார் : எம்.ஜி.ஆர் வாழ்க்கை, ஆர். முத்துக்குமார், R. Muthukumar, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , R. Muthukumar Valkkai Varalaru,ஆர். முத்துக்குமார் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy R. Muthukumar books, buy Kizhakku Pathippagam books online, buy Vaadhyar:MGR Vazhkkai tamil book.
|
எம்.ஜி.ஆர் ஒரு விசித்திர மனிதர். மேலோட்டமாகப் பார்க்கும்போது எனக்கு அவர் ஒரு கோமாளியாக மட்டுமே தெரிந்தார். நாகப்பட்டினத்தில் என் வீட்டுச் சுவரில் யாரோ ஒட்டிவிட்டுப் போயிருந்த எம்.ஜி.ஆர் போஸ்டர்களை நான் கிழித்து எறிய, அதனால் கடும் ஆவேசம் கொண்ட சில ரசிகர்களின் கெட்ட பேச்சுகளுக்கு ஆளாகியிருக்கிறேன்.
ஐந்தாம் வகுப்பு வரை நான் படித்த பள்ளியில் கருணாநிதி, கலியமூர்த்தி என்று இரு தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர்கள் என் வகுப்பில் இருந்தனர். தினம் தினம் கலைஞர் கருணாநிதியையும் நடிகர் சிவாஜி கணேசனையும் திட்டித் தீர்ப்பதுதான் அவர்கள் வேலை. அவர்கள் இன்றும் எம்.ஜி.ஆரை வழிபடும் பக்தர்களாகவே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
தமிழ்ச் சினிமாக்களில் எம்.ஜி.ஆர்தான் முதல் கமர்ஷியல் ஹீரோ. அவரைப் போட்டுப் படம் எடுத்தால் வெற்றி நிச்சயம். ஆனால் அவர் ஆரம்பத்தில் ஒரு ஹீரோவாக நடிப்பதற்கே எண்ணற்ற ஆண்டுகள் ஆயின என்பது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. இன்றைக்கு முதல் படத்திலிருந்தே தாங்கள்தான் உலக மகா ஹீரோ என்ற நினைப்புடன் நடிக்கும் அரை வேக்காட்டு அபத்த நடிகர்களை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டால் மலைப்பே ஏற்படுகிறது.
தனிப்பட்ட முறையில் எந்த எம்.ஜி.ஆர் படத்தையும் முழுதாக உட்கார்ந்து என்னால் பார்க்க முடிந்ததில்லை. அவர் படங்கள் வேறு யாருக்காகவோ எடுக்கப்பட்டுள்ளன என்று விட்டுவிடுவேன்.
அரசியல் தளத்தில் எம்.ஜி.ஆர் எனக்குத் தனித்துத் தெரிந்தார். அவரால் எப்படி அந்தக் கட்டத்தில் ஒரு கட்சியை உருவாக்க முடிந்தது என்பதில் எனக்குப் பெருத்த ஆச்சரியம். கருணாநிதி தீவிரமான கட்சி அரசியலில் ஈடுபட்டு, கட்சியில் அமைப்புரீதியாக ஆதிக்கம் செலுத்தினார். ஆனால் எம்.ஜி.ஆர் நிதி திரட்டுவது, பிரசாரங்களில் ஈடுபடுவது, சினிமாவில் திமுக கொடி, சின்னம், கருத்து ஆகியவற்றைப் புகுத்துவது என்ற அளவில்மட்டுமே இருந்து வந்தார். திமுகவிலிருந்து நீக்கப்பட்டதும், கட்சியில் செல்வாக்குள்ள யாருமே எம்.ஜி.ஆர் தரப்புக்கு வரவில்லை. நாஞ்சில் மனோகரன், கே.ஏ.மதியழகன் தவிர. இவர்களுடனும் தன் கூடவே இருக்கும் ஆர்.எம்.வீரப்பனுடனும் சேர்ந்து எம்.ஜி.ஆர் ஒரு முழு அரசியல் கட்சியை உருவாக்கியிருந்தார். அது பெரும் ஆச்சரியம்தான்.
எம்.ஜி.ஆர் ஒரு முதலமைச்சராக எப்படிப் பணியாற்றினார் என்று தெளிவான பதிவுகள் இல்லை. ஆனால் என் சிறு வயதில், எம்.ஜி.ஆருக்கு எதிராக மக்கள் பேசி நான் கேட்டதே இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதும் அவர் மேல் ஒட்டியதே இல்லை. பாராட்டுகள் எல்லாம் எம்.ஜி.ஆருக்குப் போகும்; இழிசொற்கள் எல்லாம் பிற அதிமுகவினருக்கும் அதிகாரிகளுக்கும் போகும். எப்படி அப்படி ஒரு தெய்வம் போன்ற இமேஜை அவரால் உருவாக்க முடிந்தது என்பது மாபெரும் ஆச்சரியம்தான்.
என்றாவது, யாராவது ஒருவர் எம்.ஜி.ஆரின் நிர்வாகத் திறன் பற்றி ஒரு புத்தகம் எழுதக்கூடும். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களுக்கு நல்ல சாலை வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தது எம்.ஜி.ஆர்தான் என்று ஏதோ காரணத்தால் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். அது உண்மையா என்று தெரியவில்லை. எம்.ஜி.ஆர் அவ்வப்போது ‘அண்ணாயிசம்’ என்று தன் ‘கொள்கை’களை விளக்க முற்பட்டாலும், அடிமனத்தில் மக்கள் வாழ்வில் மலர்ச்சி ஏற்படவேண்டும் என்று நினைத்த ஒரு மக்கள் தலைவர் என்ற எண்ணமும் என் மனத்தில் ஏற்பட்டுள்ளது.
அவர் தன் வாழ்நாளில், ஏதோ ஒருவிதத்தில் பெரும்பான்மையான தமிழர்களைப் பாதித்திருந்தார். அவர் நோயில் படுத்திருந்த காலத்தில், அந்த உடல்நிலையில் அவர் நிர்வாகத்துக்குச் சற்றும் லாயக்கற்றவர் என்பதைச் சிறிதும் உணராமல் மக்கள் அவருக்கு வாக்களித்தனர். சாதாரண ஏழை மக்களின் நெஞ்சத்தை அவர் தொட்டிருக்காவிட்டால் இதைச் சாதித்திருக்கமுடியாது. அவரது மறைவின்போது சென்னையில் நடந்த கலாட்டாக்களை நான் நேரில் பார்த்தேன். (அப்போது நான் சென்னை ஐஐடியில் படித்துக்கொண்டிருந்தேன். சைக்கிளை எடுத்துக்கொண்டு அண்ணா சாலையில் முட்டாள்தனமாக சுற்றினேன். பைத்தியம் பிடித்த ரசிகர்கள் யாராவது என்னை நையப் புடைத்திருக்கக்கூடும்! நல்லவேளையாக எந்தச் சேதாரமும் இன்றி ஹாஸ்டலுக்குத் திரும்பி வந்துவிட்டேன்!)
அவர் மறைந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் அவரது நினைவு நாள் அன்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.
வாத்யார் என்றாலே பொதுமக்களுக்கு அவர் ஒருவர்தான். (இந்தப் பெயர் ஏன் வந்தது?)
===
எம்.ஜி.ஆர் பற்றிய முத்துக்குமாரின் புத்தகத்தில் ஓரளவுக்கு முழுமையான சித்திரம் உருவாகியிருக்கிறது என்று நினைக்கிறேன். ஆயினும் நிறைய விடுபடல்கள் உள்ளன. முத்துக்குமார் தனது இரண்டாவது எடிஷனில் நிறையச் சேர்க்கக்கூடும்.
முத்துக்குமாரின் எழுத்தில் நல்ல முதிர்ச்சி வந்துள்ளது.
தீவிர திமுக அனுதாபியான முத்துக்குமார் எம்.ஜி.ஆரை நேர்மையாகவே கையாண்டுள்ளார். முத்துக்குமார் கருணாநிதி வாழ்க்கை வரலாறு எழுதினால் எப்படி இருக்கும் என்று பார்க்கவேண்டும்.
[மேலே நான் எம்.ஜி.ஆர் பற்றி எழுதியதற்கும் எம்.ஜி.ஆர் புத்தகத்தில் உள்ளதற்கும் சம்பந்தம் ஏதும் இல்லை. எம்.ஜி.ஆர் புத்தகத்தைப் பற்றி சொல்ல நினைத்தேன். கூடவே எம்.ஜி.ஆர் பற்றி எனக்குத் தோன்றியதையும் உடன் எழுதிவிட்டேன்.]
நன்றி : http://thoughtsintamil.blogspot.com/2009/12/blog-post_31.html